சக ஊழியரின் உயிர் காத்திடுங்கள்
ஒரு சிறந்த தற்கொலை தடுப்புத் திட்டம், சில பொதுவான கவலைகளைக் கையாளவேண்டும், அதே சமயம், நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றக் கூடியதாக அமைய வேண்டும். நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலை எண்ணத்தைக் கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்கொலையைத் தடுக்கும்
முறைகள்
பெரும்பாலான பணியிடங்களில் ஊழியர் உதவித் திட்டம் (Employee Assistance Program - EAP) அமலில் இருக்கும். அல்லது, ஊழியர் ஆரோக்கியத் திட்டம் இருக்கும்; இது ஊழியர்களுக்கு மருத்துவ ஆதரவை வழங்கும். இந்த EAPயுடன், ஒரு மனநலத் திட்டம் அல்லது ஒரு தற்கொலை தடுப்புத் திட்டத்தை இணைக்கலாம்.
இன்றைய பணிகளில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது, ஆகவே, நிறுவனங்கள் தங்களுடைய ஆரோக்கியக் கொள்கைகளில் மனநலத்தைச் சேர்க்கவேண்டிய தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், சில குறிப்பிட்ட நிறுவனச் சூழல்களில், இவ்வாறு மனநலத்தை ஆரோக்கியக் கொள்கைகளில் சேர்ப்பது கட்டாயமாகிவிடுகிறது என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
சாத்தியமுள்ள ஆபத்துகள், பாதிப்புகளைச் சுட்டிக் காட்டக் கூடிய சில முக்கியமான காரணிகள்:
தொழில் துறையின் தன்மை: அங்கே எப்படிப்பட்ட பணிகள் நிகழ்கின்றன? அவை எப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் நிகழ்கின்றன? ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலைகள் எந்த அளவு அழுத்தம் மிகுந்தவை? அவர்களுடைய தினசரி வேலைகளில் எந்த அளவு ஆபத்து உண்டு?
ஊழியர்களின் விவரங்கள்: ஊழியர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் நிறுவனத்தில் தங்களைப் பொருத்திக் கொள்ள, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் செய்ய வேண்டியிருந்ததா? (ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு மாறுதல், குடும்பத்திடமிருந்து பிரிந்து வாழ்தல் போன்றவை.) அவர்களுடைய பலங்கள், பலவீனங்கள் என்ன?
கலாச்சார மற்றும் இனப் பன்முகத் தன்மை: இந்தக் கலாசாரத்தில் பொருந்துவதற்காகச் சில ஊழியர்கள் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டியிருக்குமா? தாங்கள் வரவேற்கப்படுவதாக அவர்கள் உணர்வதற்கு ஏதேனும் செய்யப்படுகிறதாஒவ்வொரு நிறுவனத்தின் தற்கொலை தடுப்புத் திட்டமும் மனநல நிபுணர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட வேண்டும், மேற்கண்ட அம்சங்கள், பிற நிறுவனம் சார்ந்த காரணிகளின் அடிப்படையில் அவை தன்மயமாக்கப்பட வேண்டும்.தற்கொலை தடுப்புத் திட்டம்
களங்கவுணர்வைக் குறைத்தல்
ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைச் சமூகம் எந்த அளவு களங்கமாகப் பார்க்கிறதோ, அந்த அளவுக்கு அந்தப் பிரச்சனையைக் கொண்டோர் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, உதவி கேட்கத் தயங்குவார்கள். தற்கொலை மற்றும் மனநலப் பிரச்சனைகளில் களங்கவுணர்வு மிகவும் வலுவானது. ஆகவே, மக்கள் இவை பற்றி பிறரிடம் பேச விரும்புவதில்லை. இதனால் தான், எந்தவொரு தற்கொலை தடுப்புத் திட்டத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம், களங்கத்தைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும்.
மனநலம் அல்லது தற்கொலை தடுப்புத் திட்டத்தை EAPயுடன் இணைப்பதன் மூலம் மனநலப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய களங்கவுணர்வு குறைகிறது. இதன் மூலம், ஒருவருக்கு இந்தப் பிரச்சனை வரும் போது, அவர் பிறரிடம் உதவி கேட்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஒரு நிறுவனம் தனது ஆரோக்கியத் திட்டத்தில் மனநலத் திட்டத்தை இணைத்தால், பல நன்மைகள் உண்டு:
வருடாந்திர ஆரோக்கியப் பரிசோதனைகளில் மனநல ஆதரவை இணைக்கலாம். இதற்கு மனநல மதிப்பீடுகள் அல்லது, ஒரு மனநல நிபுணருடன் விவாதித்தல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதனால், யாருக்கு உதவி தேவை, யார் பாதிப்புக்குட்பட்டிருக்கக்கூடும் என்பதை அடையாளம் காணலாம். (இங்கே பாதிப்பு என்பது, பொதுவான மனநலக் குறைபாடுகள் ஆகும், குறிப்பாக, இது தற்கொலையைப் பற்றிப் பேசுகிறது). ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவோரின் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள ஒரு மருத்துவர் இருப்பது போல, அவர்களுடைய மனநலத்தைக் கவனித்துக் கொள்கிற மனநல நிபுணர் ஒருவரையும் பணியில் அமர்த்தலாம். இதன் மூலம் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் ஊழியர்கள் அதற்கான நிபுணரை எளிதில் சந்திக்கலாம், ஆலோசனை பெறலாம். இத்துடன், என்னென்ன மாதிரியான மனநல பராமரிப்பு வசதிகள் உள்ளன என்பதையும் ஊழியர்கள் தெரிந்து கொள்வார்கள். இது அவர்களுக்குப் பின்பு எப்போதாவது பயன்படலாம். ஊழியர் மனநல ஆதரவுத் திட்டமானது ஊழியர்களின் சமாளிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது, பாதிப்பைக் குறைக்கிறது, பணி அழுத்தம், போட்டி, பணியிட முரண்கள், அவர்களது நலனைப் பாதிக்கும் பிற பிரச்சனைகளால் உண்டாகும் அழுத்தங்களைக் குறைத்து, அதன் மூலம் தற்கொலைகளைத் தடுக்கிறது. எல்லா ஆரோக்கிய உதவித் திட்டங்களிலும் உள்ளது போல், இதற்கென்று ஒரு தெளிவான ரகசியக்காப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஊழியர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். மனநலப் பிரச்சனைகளும் மற்ற உடல் நலப் பிரச்சனைகளைப் போல தான், பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது எனும் விவரம் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், இதன் மூலம், மனநலப் பிரச்சனைகளைப் பற்றிய களங்கவுணர்வைக் குறைக்கலாம், உதவி தேவைப்படும் ஊழியர்கள் அதனை நாடச் செய்யலாம்.
ஊழியர்கள் தாங்கள் சந்தித்த மனநலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம் என்று அவர்களுடைய நிறுவனம் ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் எப்படி அதைத் தாண்டி வந்தார்கள் என்பதையும் அந்த ஊழியர்கள் பகிர்ந்து கொள்ளலாம், இதன் மூலம், மனநலப் பிரச்சனைகள் பேசக் கூடாதவை அல்ல, அவற்றைப் பற்றிப் பேசினால், அந்த ஊழியர்கள் மீது பாரபட்சம் காட்டப்படாது என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம்.
நுண்ணுணர்வாக்கல் திட்டங்கள்
உதவி தேவைப்படும் ஊழியர்கள் தாங்களே முன் வந்து நம்பிக்கையுடன் அதைக் கேட்க வேண்டும் என்றால், ஒரு நிறுவனம் தனது மேலாளர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ஒரு நுண்ணுணர்வாக்கல் தொகுப்பை உண்டாக்க வேண்டியது முக்கியம். இதன் மூலம், மனநலம் தொடர்பான விஷயங்களில் ரகசியத்தன்மை பராமரிக்கப்படும், களங்கவுணர்வு குறையும், ஒட்டுமொத்த மனநலத் திட்டம் மேலும் சிறப்பாகச் செயல்படும்.
உயர்மட்டங்களில் உள்ள மேலாளர்கள் அல்லது அதிகாரிகள் மனநலம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், குறிப்பாகத் தற்கொலை சம்பந்தப்பட்ட அனுபவங்களைப் பேசினால், ஊழியர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தற்கொலை எண்ணங்கள், நோக்கங்கள் என்பவை, உண்மையில் உதவி கோரும் கதறல்கள் தான் என்பது பற்றித் திறந்த விவாதங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், இதன் மூலம் ஊழியர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சனைகளைப் பேச முன் வருவார்கள், மற்றவர்கள் அதைத் தீர்ப்புச் சொல்லாத ஒரு வழியில் அணுகுவார்கள், தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவார்கள்.
விழிப்புணர்வை உருவாக்குதல்
பணியிடத்தில் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு பற்றிய உரையாடல்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வடிவமைக்கலாம். உதாரணமாக, மனநலம் அல்லது தற்கொலை தடுப்பு பற்றிய கையேடுகள், சுவரொட்டிகள், பேச்சுகள், விவாதங்கள், திரைப்படங்களைத் திரையிடுதல், பிற செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் திட்டமிடலாம். இது பற்றிய திறந்த விவாதங்களை அதிகப்படுத்தினால், மனநலம் பற்றிப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று ஊழியர்கள் எண்ணத் தொடங்குவார்கள்.
பொதுவாகத் தற்கொலை பற்றி மக்களிடையே இருக்கும் தவறான நம்பிக்கைகளை உடைக்க வேண்டும். உதாரணமாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்ட ஒருவர் பலவீனமானவர், அவர் வாழ விரும்பவில்லை, ஒருவரிடம் அவருக்குத் தற்கொலை எண்ணங்கள் வருகின்றனவா என்று கேட்டால் அவர் நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டு விடுவார். இப்படிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன, அவற்றை மாற்றுவது அவசியம்.
மனத் துயரில் உள்ளவர்களை அடையாளம் காணுதல்
ஒரு தற்கொலை திடீரென்று நடந்து விடுவதில்லை என்கிறார்கள் மனநல நிபுணர்கள். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒருவர் தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றிச் சிந்திக்கிறார். ஒரு நிறுவனம், தனது ஊழியர்கள் மத்தியில் இப்படிப்பட்ட மனத் துயரத்துடன் இருப்பவர்கள் யார் என்று அடையாளம் கண்டால், அந்த நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதைச் சிந்தித்து, அந்த உதவி அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்யலாம்.
மனத் துயரில் உள்ள ஊழியர்களை அடையாளம் காண ஒரு சிறந்த வழி, நிறுவனத்தில் பாதுகாவலர்களை உருவாக்குவது! பாதுகாவலர்கள் என்போர், மனநல நிபுணர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதே சமயம், ஒருவர் மனத் துயரத்தில் உள்ளதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரையாவது இவர்கள் பார்த்தால், அவர்களுக்கு ஆரம்பகட்ட உணர்வுநிலை ஆதரவை இவர்களே வழங்குகிறார்கள், கூடுதல் உதவிக்காக, அவரை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பி வைக்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியர்கள் சிலருக்குப் பாதுகாவலர் பயிற்சி அளிக்கலாம், அவ்வாறு செய்வதன் மூலம், மனத் துயரின் அறிகுறிகள், அல்லது சிவப்புக் கொடிகளைக் கண்டறியக் கூடிய மக்களின் ஓர் அகலமான வலைப் பின்னலை உருவாக்கலாம்.
பாதுகாவலர்களுக்கான எதார்த்தமான மற்றும் பயனுள்ள விவரங்கள்:
ஒரு சக ஊழியருக்கு உதவி தேவை என்று அவர்கள் கண்டறிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்? யாருக்குத் தெரிக்க வேண்டும்? அந்த ஊழியருக்கு என்ன உதவி கிடைக்கும்?
பாதுகாவலர் கொண்டிருக்கக்கூடிய கவலைகளுக்குப் பதிலளிக்கும் பிற விவரங்கள்:
பாதுகாவலரின் கடமைகள் என்ன? பாதுகாவலர் தனது கடமைகளைத் தாங்க இயலாமல் சிரமப்பட்டால், என்ன செய்வது? பாதுகாவலர்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கிறது? ஒரு பாதுகாவலர் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரம்புகள் என்ன?
நெருக்கடி மேலாண்மை
நிறுவனமானது நெருக்கடிச் சூழல்களுக்கான நெறிமுறை அல்லது சிபாரிசு செய்யப்படும் செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டும். அதாவது, ஒருவர் மனத் துயரத்தில் உள்ளதாகத் தெரிந்தால், என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும்! ஒருவர் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாகத் தெரிந்தால், அல்லது, அவரே உதவி கோரினால், என்ன செய்யவேண்டும்? அதற்கான செயல்திட்டம் என்ன? நிஜமாகவே ஒருவர் தற்கொலை மூலம் தன் உயிரை முடித்துக் கொண்டால், அப்போது என்ன செய்ய வேண்டும்?
சிபாரிசு அமைப்பு மற்றும் ஒருவரது நலனைத் தொடர்ந்து உறுதி செய்து கொள்ளும் ஏற்பாடுகள்
மனநலம் அல்லது தற்கொலை தடுப்புத் திட்டமொன்றை உருவாக்குகிறவர்கள் அதில் அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு பகுதி, ஒரு பகுதி நேர அல்லது முழு நேர மனநல நிபுணரை நிறுவனத்தில் சேர்ப்பது, ஊழியர்களுக்கு உதவி தேவைப்படும் போது, அவர்கள் இவர்களைத் தொடர்புகொள்ளச் செய்வது. மனநலம் சார்ந்த உதவி தேவைப்படும் ஊழியர்கள் இந்த நிபுணர்களிடம் பேசலாம், ஆலோசனை பெறலாம், அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், வேறு குறிப்பிட்ட மனநல நிபுணர்களிடம் செல்லுமாறு அவர் சிபாரிசு செய்வார். இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஒரு நிறுவனம், தன்னுடைய ஊழியர்களிடையே பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய குழுக்களை அடையாளம் காணலாம், அதாவது, மனத் துயரத்தில் உள்ள நபர்களைக் கண்டறியலாம், அவர்களுக்கு விரைவில் உதவி கிடைப்பதை உறுதி செய்யலாம். இதற்காக, நிறுவனங்கள் தங்களது EAP பராமரிப்பு வழங்குநருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், அவர்களது EAP அமைப்பில் ஒரு மனநல நிபுணரும் இடம் பெறும்படி செய்யலாம்.
மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பாக ஊழியர்களுக்கு என்னென்ன ஆதரவுகள் கிடைக்கின்றன என்பதை அந்நிறுவனம் தெளிவு படுத்தவேண்டும். இதற்காக அவர்கள் சுவரொட்டிகள், கையேடுகளைப் பயன்படுத்தலாம், நிறுவன இணையதளத்தில் எல்லாரும் காணும்படி அறிவிப்புகளை வெளியிடலாம், மேலாளர்-ஊழியர் அல்லது ஊழியர்-HR கூட்டங்களின் போது இது பற்றி விவாதிக்கலாம். இதனால், தற்கொலை எண்ணம் கொண்ட ஊழியர்கள் பிறரிடம் உதவி கேட்கத் தொடங்குவார்கள், அதன் மூலம் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தலாம்.
ரகசியக் காப்பு வாசகங்கள்
மனநலப் பிரச்சனை அல்லது தற்கொலை எண்ணம் கொண்ட ஓர் ஊழியர், அதைப் பற்றிப் பிறரிடம் பேசுவதற்கோ உதவி கேட்பதற்கோ தயங்குகிறார். அதற்குக் காரணம், அவர்கள் சொல்லும் விஷயம் ரகசியமாக இருக்குமா, அல்லது பிறருக்குத் தெரிந்துவிடுமா என்று அவர்கள் கவலைப்படுவது தான்.
ஆகவே, தற்கொலை தடுப்புத் திட்டத்தில் ஊழியர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்குப் பதிலளிக்கும் ரகசியக் காப்பு வாசகங்கள் இடம் பெற வேண்டும்: ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் யாரிடம் பகிர்ந்து கொள்ளப்படும்? அந்த விவரங்கள் எந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும்? ஓர் ஊழியர் தனது மனநலப் பிரச்சனை அல்லது தற்கொலை எண்ணங்களைப் பற்றிப் பேசினால், அது அவர்களுடைய பதவி அல்லது வேலையைப் பாதிக்குமா?
இவை பற்றி ஒரு நிறுவனம் துல்லியமான விவரங்களை வழங்கினால், அதன் ஊழியர்கள் திருப்தியடைவார்கள், தங்கள் நிறுவனம் தங்கள் மீது அக்கறை வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள், தாங்கள் சொல்லும் விவரங்கள் நுண்ணுணர்வுடன் கையாளப்படும் என்று எண்ணுவார்கள், தங்களுக்கு வந்துள்ள மனநலப் பிரச்சனை காரணமாகத் தங்கள் மீது பாரபட்சம் காட்டப்படாது என்று நம்புவார்கள். இதனால், தங்களுக்கு உதவி தேவைப்படும் போது, அவர்கள் தயங்காமல் உதவி கோருவார்கள்.
ஒரு நிறுவனத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழுக்கள்
வழக்கமாகத் தாங்கள் வேலை செய்யும் பாணியிலிருந்து திடீரென்று மாறுகிற ஊழியர்கள் (உதாரணமாக: செயல்திறன் குறைதல், நேரத்துக்கு வேலைக்கு வராமலிருத்தல் அல்லது வேலைத் தரம் குறைதல்) வேலை பறி போகக்கூடும் / பொறுப்புகள் குறைக்கப் படக்கூடும்/ சம்பளம் குறையக்கூடும் என்கிற நிலையில் உள்ள ஊழியர்கள், தங்கள் சொந்த ஊரிலிருந்து மாறி வந்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறவர்கள், புதிய சூழலில் பொருந்தச் சிரமப்படுகிறவர்கள், அதன் மூலம் பயமுறுத்தலுக்கு ஆளாகிறவர்கள், நிதி அல்லது உணர்வுத் துயரில் உள்ள ஊழியர்கள், அதற்கான காரணம் அவர்களுடைய வேலை தொடர்பானதாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி.
சில நிறுவனங்களில், பாதிப்பை உண்டாக்கக் கூடிய காரணிகளை ஊழியர்கள் அதிகம் காண்பார்கள், உதாரணமாக, ராணுவம் அல்லது பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் வன்முறையை அடிக்கடி காண நேரிடும், வேறு சில நிறுவனங்களில், ஒருவர் தற்கொலை மூலம் தன் உயிரை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும், உதாரணமாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது கன ரக இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய திட்டத்தைத் தயாரிக்கும் போது, இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சக ஊழியரின் உயிர் காத்திடுங்கள்
மனத் துயரில் இருக்கும் ஒருவரைக் காப்பாற்றும் திறமை, HR பணியாளர்கள் அல்லது மனநல நிபுணர்களுக்கு மட்டும் தான் உண்டா? உதவியைக் கோருகிற உங்கள் சக ஊழியருக்கு நீங்கள் எப்படி உதவலாம், ஆதரவளிக்கலாம்?
நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலை எண்ணத்தைக் கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒருவர் மனத் துயரில், மனச் சோர்வில் உள்ள போது, அல்லது, தற்கொலையைப் பற்றி எண்ணுகிற போது, அவருக்கு அருகிலுள்ளவர்கள் தான் இதனை உடனடியாக உணர இயலும். நம்முடைய பணியிடங்களில், நமது குழுத் தலைவர்கள் அல்லது HR மேலாளர்களை விட, நமது சக ஊழியர்களுடன் தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம். ஓர் ஊழியர் தடுமாற்றத்தில் உள்ளார், வீட்டிலோ அலுவலகத்திலோ அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றால், அவரருகே உள்ளவர்கள் தான் அதை முதலில் தெரிந்து கொள்வார்கள். இந்தச் சூழ்நிலைகளில், அவர்கள் நுண்ணுணர்வுடன் நடந்து கொண்டால், தங்களது சக ஊழியர்களுக்கு உதவலாம், தற்கொலையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றலாம்.
ஆதாரம்: தேசிய மனநலம் நிறுவனம்
Social Plugin